Thursday, March 11, 2010

திராவிடர்


திராவிடர் என்னும் சொல், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும். தற்காலத்தில் திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி, தென்னிந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. மத்திய இந்தியா, வட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற பகுதிகளிலும் சிறிய அளவில் பாரம்பரியமாக வாழும் திராவிடர் காணப்படுகின்றனர்.

திராவிட மொழிகள்


திராவிட மொழிகளில் முக்கியமானவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பனவாகும். இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப்பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது. இன்று திராவிட மொழிக் குடும்பத்தில், சுமார் 73 மொழிகள் வரை இருப்பது அறியப்பட்டுள்ளது.

குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு.

சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.

அடியில் தன்னள வரசர்க் குணர்த்திவடிவே லெறிந்த வான்பகை பொறாதுபஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ளவடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டுதென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)

பாண்டியனை வாழ்த்தும் பொழுது"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்தமுந்நீர் விழவின் நெடியோன்நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)

"தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க."

இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.

இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இது போல செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.

இத்தென்குமரிக்கண்டத்தின் தலைநகராக மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் இன்று சிலர் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும்.

அறிவியல் கூற்றுகள்


இன்று வாழும் இலெமூர் எனப்படும் புதுவின விலங்கினம் மடகாஸ்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன.பிலிப் ஸ்க்லேடெர் என்னும் ஆராய்ச்சியாளர் தனது கூற்றுகளில் இலெமூர் இன விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சம் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன எனவும் மேலும் இவ்வகை தொல்லுயிர் எச்சம் ஆப்பிரிக்க மற்றும் கிழக்கரபு கண்டங்களில் இல்லை எனவும் விளக்குகின்றார்.


ஸ்க்லேட்டரின் இக்கூற்றானது அவரது காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை ஆனால் சார்லஸ் டார்வின் கூற்றான "ஒரு குறிப்பிடப்பட்ட விலங்கினமானது பூமியில் ஒரு முனையிலும் அதே இனமானது பூமியின் வேறு முனையினும் வாழ்ந்து வருவதன் காரணங்களினால் பண்டைக் காலங்களில் ஏற்பட்ட நிலவதிர்வுகள் மற்றும் நிலப்பிரிவுகள் போன்ற நிகழ்வுகளினால் இவ்வாறு ஒரே இனமானது பூமியின் பல்வேறு பகுதிகளில் சிதறிக்கிடக்க முடியும்" என்ற கூற்றினை ஏற்றனர்.இவ்வாறு ஏற்பட்ட கணிப்பின் படி பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் அதன் நிலப்பரப்பு பரந்து விரிந்து ஆப்பிரிக்க கண்டங்களுடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

KASI said...

Tamil is the oldest language known to mankind. It was spoken almost 5000 years ago and it is still being spoken. Tamil is mostly spoken in Sri Lanka and some areas in India. Tamils live allover the world. They live in Canada, U.S, United Kingdom, France, Germany, Norway, Denmark, Australia and some other countries in Europe.

PROUD TO BE TAMIZHAN